Coorg பயணத்தின் முதல் நாளாக Bylakuppe புத்த மடத்தை பற்றி எழுதி இருந்தேன். இரண்டாவது நாளில் பாகமண்டலா – தலைக் காவேரி மற்றும் Abbey நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தோம்.
பாகமண்டலா – தலைக் காவேரி
தலைக் காவேரி நாங்கள் தங்கி இருந்த Madikeri எனும் ஊரிலிருந்து 56 கி.மீ தொலைவில் இருந்தது. முதலில் தலைக் காவேரி சென்றுவிட்டு பின்பு பாகமண்டலா செல்லலாமென்று முடிவெடுத்து தலைக் காவேரி சென்றோம்.
காலை 8 மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டதினால் வழி முழுக்க பனி மூட்டமாகவே இருந்தது. பனிமூட்டத்தின் நடுவில் காப்பித் தோட்டமும், வானுயர்ந்த மரங்களில் படர்ந்திருந்த மிளகு கொடியும், நாம் சுவர்கத்தின் நடுவில் தான் செல்கிறோமோ என்றதொரு பிரமிப்பைக் கொடுத்தது. நேரம் செல்லச் செல்ல பசி மெதுவாக வயிற்றைக் கிள்ளவே, பாகமண்டலத்தில் காலை உணவை முடித்துக் கொண்டு தலைக் காவேரி சென்றடைந்தோம்.
அங்கும் அதே மாதிரியான வானிலையே. பனி மூட்டத்தின் நடுவில் காவேரி நதி ஆரம்பிக்கும் இடத்தைப் பார்க்கவே அற்புதமாக இருந்தது. இந்த இடம் கடல் மட்டதிற்கு மேல் 1276 மீ உயரத்தில் அமைந்திருகிறது. இங்கு காவேரி நதி ஓர் சிறு ஊற்றாக ஆரம்பித்து பின்பு நிலத்தடியில் ஓடி காவேரியாக உருவெடுகிறது. இந்த ஊற்று ஆரம்பிக்கும் இடத்தில், மக்கள் வழிபடுவதற்காக சிறு கோவிலும் உள்ளது. இந்த கோவில் காவேரி அம்மனுக்காக அர்பணிக்கப் பட்டிருகிறது. மக்கள் நாணயங்களை இங்கு இருக்கும் சிறு குளத்தில் போட்டு காவேரி அம்மனிடம் வேண்டிக்கொள்கின்றனர்.
பின்பு அங்கிருந்து கிளம்பி பாகமண்டலா வந்து அங்கிருக்கும் பாகண்டேஷ்வரா கோவிலுக்கு சென்றோம். இந்த கோவில் “Karavali” பாணியில் கட்டி இருகின்றனர். அதாவது கோவில் மேற்பாகம் கோபுரம் மாதிரி இல்லாமல் கூரை வடிவில் இருக்கின்றது. மேலும் இங்கு காவேரி நதியுடன் kannike மற்றும் புராண சிறப்பு வாய்ந்த சுஜ்யோதி நதியும் கலப்பதினால் “திரிவேணி சங்கமம்” என்றும் அழைக்கப்படுகிறது.
பாகமண்டலவிலிருந்து Madikeri வந்து மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு Abbey நீர்வீழ்ச்சிக்கு சென்றோம். அங்கு செல்வதற்கான சாலை மிகவும் குறுகலாக இருந்ததினாலும், மழை பெய்து கொண்டிருந்ததினாலும், நீர்வீழ்ச்சியை சென்றடைய சற்றே சிரமமாக இருந்தது.
அங்கு சென்றடைந்த பின்பு, Abbey-ன் அழகு, நாங்கள் கடந்து வந்த சிரமங்களை மறக்கச் செய்தது. நீர்வீழ்ச்சியின் எதிரில் ஓர் பாலம் இருக்கிறது. சாரல் அந்த பாலத்தையும் கடந்து குளிரூட்டியது. என் இரண்டாவது மகன்(5 வயது) அந்த சாரலைக் கண்டு சொன்ன கமெண்ட், “Wow!!!, falls-ல் சுடு தண்ணி எல்லாம் வருதே”.
அனைத்தையும் ரசித்து விட்டு நாங்கள் தங்கி இருந்த Home Stay சென்றடைந்தோம். அடுத்த நாள் Dubare – யானைகள் முகாமிற்கு சென்று அவைகளுடன் சிறுது நேரத்தை செலவழித்து விட்டு ஊர் நோக்கி கிளம்பினோம்.
Bylakuppe, தலைக்காவேரி, Abbey நீர்வீழ்ச்சி மற்றும் யானைகளின் முகாம் ஆகிய அனைத்தையும் எங்களை விட எங்கள் வீட்டு குழந்தைகள் மிகவும் ரசித்தனர். ஆகவே எங்களுக்கு மட்டுமல்லாது அவர்களின் மனதிலும் Coorg பயணம், நீங்கா இடம் பெற்றுவிட்டது.