மதுரையில் பிறந்த மற்றும் அங்கு வாழ்கின்ற மக்களில் பலர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் கண்டிப்பாக புது மண்டபம் சென்றிருப்பார்கள். ஏனெனில் குழந்தை பிறப்பிலிருந்து, மக்கள் சாகும் வரையில் தேவையான அத்தனை பொருட்களும் கிடைக்கும் இடமாக இருக்கிறது புது மண்டபம். இக்கால மக்களுக்கு புது மண்டபம் என்று சொன்னவுடன் சட்டென நினைவுக்கு வருவது பித்தளை பாத்திரக்கடைகளும் புத்தகக் கடைகளும் தான். ஆனால் பலருக்கு இது எதற்காகக் கட்டப்பட்டது, மற்றும் அதன் வரலாற்றினைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?
இந்த மண்டபம் 1500 க்களில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. வரிசைக்கு 20 தூண்கள் வீதம் 5 வரிசைகளில் மொத்தம் 100 தூண்கள் உள்ள வசந்த மண்டபத்தைச் சுற்றியே இப்பொழுதுள்ள கடைகள் இருக்கின்றன. வருடந்தோறும் சித்திரைத் திருவிழாவின் பொழுது இங்கு மீனாக்ஷி மற்றும் சுந்தரேஸ்வரர் எழுந்தருள்வர்.
நாயக்கர்கள் காலத்தில் இந்த மண்டபம், முக்கியமாக அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கோவிலுக்கு சென்று வந்த பின்னர் இளைப்பாறுவதற்கே பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் இப்பொழுதுள்ள புத்தகக் கடைகள் மற்றும் பித்தளைப் பாத்திரக்கடைகள் இருக்கும் இடம் தண்ணீர் செல்லும் கால்வாயாக பயன்படுத்தி வந்துள்ளனர். ராணியர் வந்து இளைப்பாறும் பொழுது குளிர்ச்சியாக இருக்கவே இந்த ஏற்பாடு.
இந்த மண்டபத்தில் மீனாட்சியின் திக்விஜயக் காட்சியும், சிவபெருமானுடைய ஊர்த்துவத்தாண்டவக் காட்சியும் சிலைகள் மூலம் சித்தரித்துள்ளனர்.
மண்டபத்தின் தூண்களின் நடுவில் உள்ள பட்டயக் கல்லில் சிவபெருமானின் 64 திருவிளையாடலும் செதுக்கப்பட்டுள்ளன. கிழக்கு வாயிலிலும், தெற்கு வாயிலிலும் 2, 2 குதிரைகள் மண்டபத்தை இழுத்து செல்வது போன்று உருவாக்கி இருப்பதினால் இம்மண்டபம் ஓர் ரதம் போன்று காட்சியளிக்கிறது(இதனை புது மண்டபத்தின் முன்புறத் தோற்றப் படத்தில் காணலாம்).
மீனாட்சி அம்மன் கோவிலின் நந்தி மண்டபத்தில் காணப்படும் 27 சிலைகளை இங்கும் செதுக்கி உள்ளனர்.
மன்னர் காலத்திற்கு பிறகு ஆங்கிலேயர் காலத்தில் இந்த மண்டபம் ஓர் நூலகமாக செயல்பட்டு வந்திருக்கிறது. இந்தியா சுதந்திரமடைந்த பின்னரே இந்த மண்டபத்தில் கடைகள் முளைக்கத் தொடங்கியுள்ளது. இப்பொழுதுள்ள கடைகளின் வயது கிட்டத்தட்ட 100 ஆண்டுகள்.
சித்திரைத் திருவிழா தொடங்க இருப்பதினால், திருவிழாவின் பொழுது கள்ளழகரின் பக்தர்கள் உடுத்தும் உடைகளைத் தைக்கும் பணி சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.
கருங்கச்சை மற்றும் குல்லா வியாபாரம் செய்யும் கார்த்திகேயன் தன் தயாரிப்புகளுடன்….
மதுரை திருவிழா மட்டுமல்லாது திருநெல்வேலியின் சுடலைமாடசாமி திருவிழாவிற்கும் இங்கிருந்தே துணிகள் வாங்கி செல்கின்றனர் பக்தர்கள்.
வருங்காலத்தில் புதுமண்டபத்தை ஓர் அருங்காட்சியகமாக மாற்றும் திட்டத்தில் அரசாங்கம் இருப்பதாக இங்குள்ளவர்கள் தெரிவித்தனர். அப்படி மாற்றினால் அரசாங்கத்திற்கு நல்ல வருமானமும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும், ஆனால் இங்குள்ள கடைகளும், கடைகளை நடத்துபவர்களின் வாழ்க்கையும் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.