இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ஹம்பி செல்லலாம் என்று 2, 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு அதை ஒரு வழியாக செயல்படுத்தியும் விட்டோம். ஏற்கனவே 2005-ம் வருடம் ஒரு முறை ஹம்பி சென்று வந்துவிட்ட காரணத்தினால், அப்பொழுது என்னென்னவெல்லாம் விட்டு போய் இருந்ததோ அங்கெல்லாம் சென்று விட முடிவெடுத்தோம். அதன் படி மூன்றாம் நாள் நாங்கள் சென்றது கமலாபுரம் என்னும் ஊரில் இருக்கும் பட்டாபிராமர் கோவில். அதென்ன முதல் இரண்டு நாட்களுக்கு சென்று வந்த இடங்களை எல்லாம் விட்டுவிட்டு மூன்றாம் நாள் சென்ற கோவில் மட்டும் என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. ஏனோ இந்த கோவில் எனக்கு அவ்வளவு பிடித்து போனது. பிடித்ததிற்கான காரணத்தை சொல்ல முடியவில்லை. ஏதோ ஓர் ஈர்ப்பு.
இந்தக் கோவில் 1540-ம் வருடம் அச்சுதராய மன்னரின் ஆட்சிக்காலத்தில் திம்மராயர் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கோபுரம் பிற்கால விஜயநகர கட்டிடக்கலைக்கு நல்ல ஒரு உதாரணம். இது சோழ கட்டிடக்கலை முறையில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இது கமலாபுரம் தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. ஆனால் விருபாக்ஷா மற்றும் விட்டலா கோவில்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏனோ இந்த கோவிலுக்கு வருவதில்லை. அதனால் நாங்கள் அங்கு சென்றிருந்த போது யாருமே இருக்கவில்லை. அதுவே ஒரு வெறுமையை கொடுத்தது. 2005-ல் நாங்கள் செய்த பெரிய தவறு, இந்த கோவிலுக்கு செல்லாதது தான்.
விட்டலா கோவில் அளவுக்கு பெரியதாய் இருக்கிறது இந்த பட்டாபிராமர் கோவிலும். அந்த கோவில் அளவுக்கு வேலைப்பாடுகள் இல்லை தான், இருந்தாலும் அழகில் சற்றும் குறைந்து விடவில்லை. இங்கிருக்கும் மண்டபத்தின் முதல் வரிசை தூண்களில் அழகான இரண்டு யாழிகள் பிரமாண்டத்தை கூட்டுகின்றன. அங்கிருக்கும் தூண்களின் அடிப்பாகத்தை சிங்கங்கள் தாங்கிப்பிடித்திருப்பதிலிருந்து, இது சோழர்களின் கட்டிடக்கலை பாணி என்று தெரிந்து கொள்ள முடிகிறது(இதை என் தோழி லக்ஷ்மி-யிடமிருந்து சுட்டது).
கோவில் முழுக்க சுற்றிவிட்டு நடுவில் இருக்கும் கற்பக்கிரகத்திற்கு சென்றோம். அங்கு பட்டாபிராமர் இருக்க வேண்டிய இடம் காலியாக இருந்தது. பிற்காலத்தில் வேறு பல மன்னர்களின் ஆக்கிரமிப்பின் பொழுது சூறையாடப்பட்டிருக்கலாம். ஏனோ அதைப்பார்க்கையில் பறவை இல்லாத பறவைக்கூட்டைப் பார்த்ததைப் போன்றதொரு வருத்தம்.
பிறகு இங்கிருக்கும் கோபுரமும் அதே சோழர் பாணியில் காட்சியளிக்கிறது. கோபுரத்தின் அடிப்பாகம் கற்களினாலும், மேல் பாகம் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையினால் கட்டி இருக்கிறார்கள். கோபுரத்தின் மேல்பாகம் காலத்தினால் சற்றே களையிழந்து போயிருந்தது. அதனையும் கற்களினாலேயே கட்டி இருந்திருந்தால் திம்மராயர் கட்டும் பொழுது இருந்திருந்த அதே அழகு இன்று வரை நீடித்திருக்குமே என்ற ஆதங்கமே மிஞ்சியது.